சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அடிவாரத்தில் தனியார் பள்ளிகள் இருக்கும் இடத்தில் மாணவர்கள் விளையாடி க் கொண்டிருந்தபோது ரத்த கறையுடன் அட்டைப்பெட்டி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சோதனை நடத்தினர். இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் ஓடை அருகே புதிதாக குழி தோண்டி புதைத்த தடயமும் இருந்ததால் உடனடியாக வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வருவாய்த்துறையினர் முன்னிலையில் குழியை தோண்டி பார்த்தபோது நாயை அடக்கம் செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியில் வசிக்கும் போலீஸ் அதிகாரியின் வீட்டில் வளர்த்த நாய் விபத்தில் சிக்கி நேற்று மாலை உயிரிழந்தது. அந்த நாயை பெட்டியில் வைத்து கொண்டு வந்து ஓடைப்பகுதியில் புதைத்தனர். ஆனால் அட்டைப்பெட்டியை அங்கேயே விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.