
சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் காளியப்பா நகரில் சிவக்குமார் என்பவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் சிவக்குமாருக்கு சொந்தமான வேனை போரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தி வந்தனர். அந்த வேனை நரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல இரண்டு பெண் ஊழியர்கள் உட்பட 6 பேரை நரேஷ் வேனில் ஏற்றி கொண்டு கொரட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வேன் தீப்பிடித்து எரிந்ததால் அனைவரும் உடனடியாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் வேன் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வேன் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.