துபாயில் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற ACC 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது, இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே, பாகிஸ்தான் கேப்டன் ஃபர்ஹான் யூசப்புடன் கைகுலுக்குவதைத் தவிர்த்தது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. மழை காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக நடைபெற்ற டாஸ் நிகழ்வின்போது, இரு நாட்டு கேப்டன்களும் கைகுலுக்குவதை வேண்டுமென்றே தவிர்த்தனர்.
செப்டம்பர் மாதம் நடந்த சீனியர் ஆடவர் ஆசியக் கோப்பைப் போட்டியின் போது, இந்தியாவின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதன்முதலில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதில்லை என்ற முடிவை எடுத்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் இரு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையேயான இராணுவ மோதலைக் கண்டிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதே பாணியை இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், ஏசிசி ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியின் போது ஜிதேஷ் சர்மாவும் கடைப்பிடித்தனர். தற்போது நடைபெற்ற இப்போட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை ஆறு முறை மோதி உள்ள நிலையில், இந்தியா தொடர்ந்து இந்த ‘கைகுலுக்க மறுக்கும்’ கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.
இந்தத் தொடரில், இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 234 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வைபவ் சூர்யவன்ஷியின் 171 ஓட்டங்கள் உதவியுடன் 433 ஓட்டங்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியும் மலேசியாவை 297 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆதிக்கத்துடன் வந்தது. போட்டித் தொடரின் துவக்கத்தில் இரு அணிகளும் வெற்றி பெற்ற நிலையில், இந்தக் கைகுலுக்க மறுப்புச் சம்பவம் அரசியல் ரீதியான எதிர்ப்பின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.
