கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வழித்தடங்களில் புதிய  வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் ஏப்ரல் மாதம் முதல் பீகாரில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை ரயில்வே வாரியம் தொடங்கியுள்ளது. மத்திய பட்ஜெட்டில் பாட்னாவில் இருந்து ஹவுரா மற்றும் பாட்னாவில் இருந்து ராஞ்சி வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வாரணாசி மற்றும் ஹவுரா இடையே பயன்பாட்டிற்கு வரும் வந்தே பாரத் ரயில் பீகாரின் கயா நகரத்தின் வழியாக செல்கிறது. இதன் மூலமாக பீகாரின் தலைநகர் மேற்கு வங்கத்தின் தலைநகருடன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இணைக்கப்படுகிறது.

தற்போது பாட்னா – ராஞ்சி ஜனசதாப்தி ரயிலில் இரு நகரங்களுக்கு இடையேயான பயணத்திற்கு சுமார் எட்டு மணி நேரம் ஆகிறது. ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கும் பாட்னாவுக்கும் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதன் மூலமாக ரயில் பயணம் வெறும் 4 மணி நேரத்தில் முடிவடைகிறது. அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி ஹவுரா இடையே  ஒரு வந்தே  பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்குவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் மத்திய பட்ஜெட்டில் பீகாரில் புதிய ரயில் பாதைகள் அமைக்க முன்மொழியப்பட்டது.

கயா- போத் கயா -சத்ரா, கயா- நடேசர், கயா டால் டோங்கன்ச் வழியாக ரஃபிகஞ்ச், ராஜ்கீர் -ஹிசுவா,-டில்டியா, நடேசர்- இஸ்லாம்பூர்,பிஹ்தா-அவுரங்காபாத் வழியாக அனுக்ரனா நாராயணன் சாலை,அராரியா-கல்கலியா,ஃபதுஹா-இஸ்லாம்பூர், வைஷாலி வழியாக, அராரியா- சுபால், சாப்ரா-முசாபர்பூர் மற்றும் பிற நகரங்களுக்கு இடையேயான ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக 238 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின் பீகார் மக்களின் பயணம் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக கயா செல்லும் மக்களுக்கு இனி சிரமம் இருக்காது.