தமிழகத்தின் நிதித்துறை அமைச்சராக இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இவர் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் ஆடியோவை சவுக்கு சங்கர் வெளியிட்ட நிலையில் இரண்டாவது ஆடியோவை பாஜக அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்துக்கு தற்போது வீடியோ மூலமாக விளக்கம் கொடுத்துள்ளார். அதில் இது போன்ற போலி ஆடியோக்களை தொழில்நுட்பங்கள் உருவாக்கும் எனக் கூறி சில வீடியோக்களை காண்பித்தார். அதன் பிறகு உண்மை போன்று காட்சியளிக்கும் இத்தகைய வீடியோக்களை கணினி மூலம் உருவாக்க முடியும் என்றால் ஆடியோ கோப்புகளை என்னவெல்லாம் செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோக்களை நான் பேசவில்லை அது முற்றிலும் போலி என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக மாநில தலைவர் யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்லாத ஒன்றை ஆடியோவாக வெளியிடும் அளவுக்கு கீழ்த்தரமாக இறங்கியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருவதோடு பல நல்ல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுக்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.

சபரீசன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து என்னை பிரிப்பதன் மூலம் தங்களுடைய அரசியல் எண்ணங்களை நிறைவேற்ற துடிக்கிறது ஒரு பிளாக் மெயில் கும்பல். ஆனால் இது போன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. திமுக கழகம் தொடங்கியதிலிருந்து அனைவரும் ஒரே கழகம் ஒரே குடும்பம் என ஒற்றுமையாக இயங்கி வருகிறோம். இனிவரும் காலங்களிலும் அவ்வாறே தொடர்வோம். அறம் வெல்லும் என்று கூறியுள்ளார்.