குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் ரோலக்ஸ் சாலையில் (Rolex Road) உள்ள ஒரு குடியிருப்பில், செல்லப் பிராணி நாய் ஒன்று ஒரு பெண்ணைத் தாக்க முயன்ற நிலையில், நாயின் உரிமையாளர் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உதவாமல், மாறாக அவரை அறைந்த அதிர்ச்சி வீடியோ வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

லிஃப்டுக்காகக் காத்திருந்த கிரண் வகேலா (Kiran Vaghela) என்ற பெண் மீது பாயல் கோஸ்வாமி (Payal Goswami) என்பவரின் நாய் வேகமாக நகர்ந்துள்ளது.

நாய் தன்னை நோக்கி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் கிரண் வகேலா, நாயின் உரிமையாளரிடம் ஜாக்கிரதையாக இருக்கக் கோரினார். ஆனால், உதவி செய்வதற்குப் பதிலாக, நாயின் உரிமையாளர் பாயல் கோஸ்வாமி ஆத்திரமடைந்து கிரண் வகேலாவை அறைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. “நாயின் தாக்குதலை விட, உரிமையாளரின் செயல் கண்டிக்கத்தக்கது” என்று இணையப் பயனர்கள் பலர் கோபத்துடன் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

செல்லப் பிராணிகளை வைத்திருப்பவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், தாக்குதல் நடத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.