தஞ்சாவூர் மாவட்டம் விநாயகம்பேட்டையில் வ.ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ஆவார். இவர் அந்த பகுதியில் சில மத மாற்றத்தில் ஈடுபட்டதை கண்டித்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி இவர் கடையிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக எச்.முகமது ரியாஸ், எஸ். நிஸாம் அலி, ஒய்.சர்புதீன், என்.முகமது ரிஸ்வான், ஏ.அசாருதீன் முகமது, தவ்பீக் முகமது, பர்வீஸ், தவ்ஹீத் பாட்சா, ஏ.முகமது ஹசன் குத்தூஸ் ஆகியோரை கைது செய்தனர்.

அதன் பின் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தமிழக காவல்துறை வழக்கின் ஆவணங்களை தேசிய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தது. இந்த சம்பவம் குறித்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் புதிதாக ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதன் பின்னர் இது தொடர்பாக மேலும் பலரை கைது செய்தது. அதில் ஹா.முகமது அலி ஜின்னா (37), மு.அப்துல் மஜீத் (37), மு.புர்ஹானு தீன் (31), தா.சாகுல் ஹமீது (30), அ.நபீல் ஹாசன்(31) ஆகிய 5 பேர் குறித்த தகவல் தெரிந்தால் ஒரு நபருக்கு 5 லட்சம் என்ற வீதம் 25 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று கடந்த 2021ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை அறிவித்தது.

இந்த வழக்கில் தலைமுறைவாக இருந்த 5 பேர் உட்பட 18 பேர் மீது என் ஐ ஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதே நேரத்தில் விசாரணையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் முகமது அலி ஜின்னா கடந்த நவம்பர் 15 ம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் அப்துல் மஜீத், சாகுல் ஹமீது ஆகிய இருவரும் கைது செய்துள்ளதாக என் ஐ ஏ தெரிவித்துள்ளது. அவர்களிடம் அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், இவர்களுக்கு தொடர்புடைய இடத்தில் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் என் ஐ ஏ தேடி வருகின்றனர்.