விபுல்ஷா தயாரிப்பில் டைரக்டர் சுதிப்டோ சென் இயக்கத்தில் சென்ற மே 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் “தி கேரளா ஸ்டோரி”. இந்த படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டு உள்ளது.

இப்படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அதன்பின் தமிழகத்தில் மால்களிலுள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில், மே 8 முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்துக்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இம்முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு அண்மையில் கொலை மிரட்டல் வந்தது. இதுகுறித்து படத்தின் டைரக்டர் சுதிப்டோ சென் மும்பை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதாவது, படக் குழுவை சேர்ந்தவருக்கு டெலிபோன் வாயிலாக மிரட்டல் வந்துள்ளது. வீட்டை விட்டு தனியாக வெளியில் வந்தால் மீண்டும் வீடுபோய் சேரமுடியாது என மர்ம நபர் மிரட்டி உள்ளார்.

ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுபற்றி மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு மிரட்டல் வந்த நபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.