ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த லீலா பவித்ரா நீலமணி என்ற பெண் பெங்களூருவில் வசித்து வந்தார். இவர் தினகர் பனாலா  என்பவரை காதலித்துள்ளார். இந்நிலையில் லீலா தனது  காதலை அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் ஜாதி காரணத்தினால் அவரது பெற்றோர் லீலாவின் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனை லீலா தனது காதலரிடம் கூறியபோது அவர் கோபமடைந்துள்ளார். இதற்கிடையே  லீலாவும் அவரது காதலரிடமிருந்து விலகியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தினகர் பாலா, லீலா பணிபுரியும் அலுவலகத்திற்கு சென்று அவரை 15 முறை கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்து சக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் லீலாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள லீலாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் பணிபுரிந்து வரும் அலுவலக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலியை 15 முறை கத்தியால் குத்திய செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.