
உத்திர பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் பெண் ஒருவர் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணின் கணவர் பைக் மெக்கானிக்காக பணியாற்றி வரும் நிலையில், அவருடைய தந்தையும் அவர்களுடன் சேர்ந்து வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை அந்த பெண்ணின் கணவர் தனது குழந்தை மற்றும் தந்தையுடன் வெளியே சென்ற போது அவருடைய மனைவி வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மாமனார் காலணிகளில் இருந்த சகதி அறையின் தரையில் பரவியது. தரையை சுத்தம் செய்த பிறகு மீண்டும் சகதி பரவியதை பார்த்த மருமகள் கோபமடைந்த நிலையில் மாமனாரை கம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரது கணவர் வீட்டிற்கு திரும்பியதும் சிறு தகராறு நடந்துள்ளது. இதனால் மனவேதனையடைந்த அந்தப் பெண் தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய சிறிய மகள் உறவினர்களை சத்தமிட்டு அழைத்ததால் அவர்கள் உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அந்த பெண்ணின் உடல்நிலை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற குடும்ப தகராறுகள் பெரிதாக மாறும் சூழ்நிலைகளில் மன அழுத்தம் காரணமாக இது போன்ற தவறான முடிவுகளுக்கு தள்ளப்படுகிறார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இத்தகைய சம்பவங்களை தடுக்கும் வகையில் குடும்பங்களுக்குள் மனநல விழிப்புணர்வு மற்றும் சமூக ஆதரவு தேவை என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.