
பொதுவாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் மும்பை ஏர்போர்ட்டில் வழக்கம்போல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாய்லாந்திலிருந்து வரும் விமானத்தில் ரகசியமாக சில அரிய வகை விலங்குகளை கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு பயணியிடம் சென்று அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்த போது அவர் 16 அரிய வகை பாம்புகளை தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பெட்டியில் பருத்தி பைகளின் உள்ளே இருந்த 16 உயிருள்ள பாம்புகளை அதிகாரிகள் மீட்டனர்.
அதில் 3 அல்பினோ பாம்புகள், 2 கென்ய மணல் போவாக்கள், 2 ஹோண்டுரான் பால் பாம்புகள், 5 காண்டாமிருக எலி பாம்புகள், 1அல்பினோ எலி பாம்பு, 1 கலிபோர்னியா கிங்ஸ்னேக், 2 கார்டர் பாம்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு பாம்புகளை கடத்தி வந்த பயணியை கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த நிலையில் பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.