கன்னடம், தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் ரம்யா என்ற திவ்ய ஸ்பந்தனா. “சான்டல்வுட் குயின்” என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, சினிமா துறையில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து காங்கிரஸ் சார்பாக மண்டியா தொகுதி பாராளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக தேர்வானார்.

அண்மையில் ரம்யா அளித்த பேட்டியில் “என் தந்தையை இழந்து 2 வாரங்களுக்குப் பின் நான் பாராளுமன்றத்தில் இருந்தேன். அங்கு எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்? யாரிடமும் எது குறித்துப் பேச வேண்டும்? என்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை. என் வாழ்க்கையில் மிகப் பெரிய செல்வமாக நான் நினைப்பது என்னுடைய அம்மா, அப்பா, அதன்பிறகு ராகுல்காந்தி. என் அப்பா இறந்தபின் நான் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன். அந்நேரத்தில் எனக்கு பெரிய ஆறுதலாக இருந்தது ராகுல்காந்தி தான். நான் மீண்டு வருவதற்கு அவர் உதவினார் என கூறியிருக்கிறார்.