தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்தது. இதன்பின் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான திரைப்படம் மெகாஹிட் வெற்றியை பெற்றது. இந்த படம் தனுஷை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இதனையடுத்து  தனுஷ் இரட்டை வேடங்களில் மிரட்டிய நானே வருவேன் திரைப்படம் வெளியானது. இப்படத்தை செல்வராகவன் இயக்கினார். இந்த படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் படங்களின் வரவேற்பு தனுஷின் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி திரைப்படம்  கடந்த 17 ஆம் தேதி திரையில் வெளியானது. இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்கினார். மேலும் இப்படத்தின் மூலம் தனுஷ் நேரடியாக தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.

கல்வி என்ற பெயரில் நடக்கும் வியாபாரத்தை சமூகத்திற்கு வெளிகாட்டும் படமாக  வாத்தி படம்  அமைந்துள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது. இப்படத்தின் கதைக்கு ரசிகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்படம் வெளியான முதல் நாளை தவிர அடுத்தடுத்த நாட்களில் வசூல் பலமடங்கு அதிகரித்துள்ளது.  இந்நிலையில் வாரிசு படத்தின் வசூலை இந்த படம் முந்தும் என அதிக எதிர்பார்ப்பு  இருக்கிறது.