
திருவள்ளூரை அடுத்துள்ள பேரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் முகேஷ் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த தீபன்(20), ஜாவித் (21) ஆகியோருடன் சேர்ந்து அப்பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம கும்பல் திடீரென முகேஷ் மீது 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.
இதில் ஒரு குண்டு மட்டும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் முகேஷ் தீபன், ஜாவித் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அந்த மர்ம கும்பல் அவர்கள் 3 பேரையும் சரமாரியாக வெட்டி தப்பி சென்றது. இதில் முகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தீபன் மற்றும் ஜாவித்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது முகேஷ் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் முகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த ஜாவித் மற்றும் தீபன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏற்கனவே நடத்திய தாக்குதலுக்கு பலி வாங்கும் விதமாக இந்த கொலை நடத்தப்பட்டது தெரியவந்தது.
அதாவது முகேஷின் தம்பி அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவருடன் பழகி வந்துள்ளார். ஆனால் ஆகாஷின் தவறான நடவடிக்கையால் முகேஷ் தனது தம்பியை ஆகாஷ் உடன் பழகுவதை தவிர்க்க கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தகராறில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆகாசுக்கு வெட்டு விழுந்தது. இதில் அவரது காது அருந்தது. இதனை பழிவாங்கும் வகையில் தற்போது இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.