திருச்சி மாவட்டத்திலுள்ள உப்பிலிபுரம் பகுதியில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று காட்டுகொட்டகை பகுதியில் வசிக்கும் மல்லிகா, ஜெயராமன் ஆகியோரின் ஆடுகள், கன்று குட்டி ஆகியவற்றை தெருநாய்கள் கடித்து குதறியது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் கோபமடைந்த பொதுமக்கள் இறந்த ஆடுகளின் உடல்களை ஊராட்சி அலுவலகம் முன்பு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.