திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ரோடு அம்பேத்கர் நகரில் பந்தல் போடும் தொழிலாளியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். சமீபத்தில் விபத்தில் சிக்கிய சக்தி வெல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இவருக்கு சோனியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சத்யா என்ற மகளும், இரண்டு மகன்களும் இருந்துள்ளனர். இதில் சத்யா அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மதியம் வீட்டின் தரையில் பூசுவதற்காக அப்பகுதியில் இருந்து சத்யா மாட்டு சாணத்தை கையில் எடுத்து வந்து கொடுத்தார்.

பின்னர் அசுத்தமாக இருந்த தனது கைகளை கழுவுவதற்காக மாநகராட்சி குடிநீர் தொட்டிக்கு சென்றார். அங்கு இரும்பாலான குடிநீர் குழாயை திறக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்து சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் அறைக்கு செல்லக்கூடிய மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.