சேலம் மாவட்டத்தில் உள்ள ஆலயச்சம்பாளையம் மணியக்காரன் வளவு பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தனம் என்ற மகளும், நந்தீஸ்வரன்(14) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் நந்தீஸ்வரன் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் கோவிந்தன் தனது நண்பரான சித்தையன், மகன் நந்தீஸ்வரன் ஆகியோருடன் பெரிய ஏரிக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு மகனை கரையில் அமர வைத்துவிட்டு கோவிந்தனும் அவரது நண்பரும் மீன் பிடித்து கொண்டிருந்தனர். திரும்பி பார்த்தபோது நந்தீஸ்வரன் காணாமல் போனதை கண்டு இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் தனது மகனை கோவிந்தன் நீண்ட நேரமாக தேடி பார்த்தார்.

ஆனாலும் நந்தீஸ்வரனை கண்டுபிடிக்க முடியாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் ஏரி பகுதிக்கு சென்று நந்தீஸ்வரனை சடலமாக மீட்டனர். பின்னர் சிறுவன் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.