
கேரள மாநிலம் கண்ணூர் அருகே பாப்பினிசேரி பகுதியில் 4 மாத குழந்தை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கண்ணூர் அருகே பாப்பினிசேரி என்ற பகுதியில் முத்து-அகம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பாக கேரள மாநிலத்திற்கு வேலைக்காக சென்றனர். இதில் முத்துவின் அக்கா மகள்கள் பெற்றோரை இழந்த நிலையில் இவர்களுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர்கள் அந்த குழந்தையின் மீது மிகவும் பாசமாக இருந்தனர். இதன் காரணமாக அவரின் அக்கா மகள்கள் தங்களின் மீது பாசம் குறைந்து விட்டதாக நினைத்து அந்த குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி இரவு கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஒரு சிறுமி அகம்மாவின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டின் அருகே இருந்த ஒரு கிணற்றில் வீசி விட்டார். பின்னர் அகம்மாள் எழுந்து பார்த்தபோது குழந்தை காணாததால் அவர் தன் கணவனிடம் அதனைப் பற்றி கூறினார்.
பின்னர் கணவன் மனைவி இருவரும் பல இடங்களில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியாததால் அவர்கள் காவல் நிலையத்தில் மறுநாள் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குழந்தையை தீவிரமாக தேடியதில் கிணற்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.