
சென்னை முகலிவாக்கம் பகுதியில் ஜோதி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி சூர்யா மற்றும் மகனுடன் சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். படுக்கை வசதி கொண்ட பெட்டியில் கீழ் இருக்கையில் சூர்யா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நடு படுக்கையின் சங்கிலி கழன்று சூர்யா மீது விழுந்தது.
இதில் அவருக்கு தலை பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் வலியில் அலறினார். உடனடியாக சூர்யாவின் கணவர் ரயிலில் இருந்த பெண் டிடிஆர் ஒருவரை முதலுதவி சிகிச்சை செய்யுமாறு கேட்டார். ஆனால் அவர் ரயிலில் முதலுதவி சிகிச்சை பெட்டி இல்லை என்று கூறிவிட்டார். இதனால் கோபமடைந்த ஜோதி ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து மொரப்பூர் ரயில்வே நிலையத்தில் ரயில் நின்ற போது சூர்யா மற்றும் ஜோதியை இறங்குமாறு அவர்கள் கூறிய நிலையில், அங்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கப்படாததால் ஜோதி இரங்கமறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் சேலம் ரயில்வே நிலையத்தில் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்துள்ளனர்.
அதன் பின் ஜோதி தன் மனைவியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார். இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது கீழ் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது படுக்கை விழுந்ததால் காயமடைந்தார்.
அந்தப் பெட்டியில் ரயில்வே அதிகாரிகள் சோதனை செய்தபோது படுக்கை வசதியிலான இருக்கையை சங்கலியுடன் இணைக்கும் கொக்கியை சரியான முறையில் கையாளவில்லை என்பதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.