தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி. இந்த தம்பதிகள் தற்போது 23-ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகிறார்கள். கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி அஜித் மற்றும் ஷாலினி திருமணம் செய்து கொண்டனர். நடிகை ஷாலினி திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாலினி மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான ஷாலினி முதல் படத்திலேயே வெற்றியை பதித்தார். காதலுக்கு மரியாதை படத்திற்கு பிறகு ஷாலினி படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அமர்க்களம் படத்தில் வாய்ப்பு அவருக்கு சென்றுள்ளது. ஆனால் படிப்பில் கவனம் செலுத்தியதால் அமர்க்களம் படத்தில் வாய்ப்பை ஷாலினி நிராகரித்துள்ளார். அப்போது அஜித் தான் உங்கள் படிப்புக்கு எந்த இடையூறும் வராது என்று கூறி ஷாலினியை நடிக்க சம்மதிக்க வைத்துள்ளார்.

இந்த தகவலை நடிகர் அஜித்தே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அமர்க்களம் படத்தின் சூட்டிங் சமயத்தில் சண்டைக்காட்சியின் போது நடிகை ஷாலினிக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. தவறுதலாக ஷாலினியின் கையில் கத்தியால் வெட்டுப்பட்டது. வலி தாங்க முடியாமல் ஷாலினி கதறி அழுதுள்ளார். இதை பார்த்த நடிகர் அஜித்துக்கு குற்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.

ஷாலினியின் உடல்நிலை குறித்து அஜித் மிகவும் கவலைப்பட்டது ஷாலினியின் மனதை தொட்டுவிட்டது. அமர்க்களம் படத்தின் சூட்டிங் முடிவடைந்த பிறகு நடிகர் அஜித் பயத்தோடு சென்று ஷாலினியிடம் தன் காதலை வெளிப்படுத்தினார். ஆனால் ஷாலினி 6 மாதம் கழித்து தான் நடிகர் அஜித்துக்கு ஓகே சொன்னார். மேலும் தற்போது 23-ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் அஜித் மற்றும் ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள்.