
சேலம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளாண்டி வலசு காமராஜர் பகுதியில் வசிக்கும் கணபதி என்பவரின் மகன் சரவணன்(14) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அழகரசன் என்பவரின் மகன் கந்தகுரு(14) ஆகிய இருவரும் அப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் பள்ளி வேனுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் பேருந்தில் இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் சரவணன் கந்தகுருவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த கந்தகுரு மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி சம்பந்தப்பட்ட மாணவன் சரவணனை காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.