கடந்த எட்டு நாட்களாக சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த சூழ்நிலையில் நேற்று அதிகாலை அதிரடியாக ஆசிரியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு,  மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

எங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியத்துக்கான அறிவிப்பு வரும்வரை போராட்டத்தை தொடர்வோம் என்று மண்டபத்திலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து டிபிஐ வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு,  ஆசிரியர் போராட்டம் நடத்தாத வகையில் பாதுகாப்பு  செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில் அவர்கள் இரவு 10:30 மணியளவில் டிபிஐ வளாகம் முன்பாக குடி நாங்கள் போராட்டத்தை தொடர்வோம் என அறிவித்ததால்,  அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு,  போராட்டத்திற்கு வந்த ஆசிரியர்கள் பலரும் கைது செய்யப்பட்டு,  பேருந்துகள் மூலமாக வெவ்வேறு மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சூழலில் அழைத்து செல்லப்பட்ட ஏராளமான ஆசிரியர்கள் எங்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டதாகவும்,  தங்கள் போராட்டத்தை வலுவிழக்க செய்ய இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும்  தெரிவித்தனர்.

இன்று அவர்களுக்கு எண்ணம் எழுதும் திட்டத்தின் பயிற்சி வகுப்புகள்  நடைபெறுகிறது.  நாங்கள் பயிற்சியில் பங்கேற்க மாட்டோம். மேலும் வரக்கூடிய ஒன்பதாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் நாங்கள் பணிக்கு செல்ல மாட்டோம். போராட்டத்தை தொடர்வோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று அவர்கள் தரப்பு தெரிவிக்கப்பட்டது.

இன்று எங்கும் அவர்கள் போராட்டத்தை மேற்கொள்ளவில்லை என்றாலும்  கூட தற்போது வரை சென்னையில் இருப்பதாக தகவல்கள் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தான் போராட்டத்தில் முன்னெடுத்து வந்த பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு பள்ளிக்கல்வித்துறை அழைத்திருக்கிறது. தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஸ்ரீமதி. ககர்லா உஷா ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்காக பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள்  பங்கேற்க இருக்கின்றனர்.