சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் ராஜாஜி நகரில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவரது 7 வயது மகன் சற்று பேச்சு குறைபாடு உடைய மாற்று திறனாளி ஆவார். இந்நிலையில் சரண்யா தனது மகனை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் இருக்கும் தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். அந்தப் பள்ளியின் தாளாளர் மீனாட்சி மாற்றுத்திறனாளி சிறுவனின் கை, கால்களை கட்டி சித்திரவதை செய்ததாக சரண்யாவுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து சரண்யா மீனாட்சியிடம் கேட்டபோது அவர் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனன்யா வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மீனாட்சி சிறுவனை சித்திரவதை செய்ததும், தட்டி கேட்ட சரண்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் உறுதியானது. இதனால் மீனாட்சி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். இவர் பா.ஜ.க மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.