காலம், காலமாக இந்தியாவில் சர்தார்ஜி ஜோக்குகள் பிரபலமாக உள்ளன. இந்த ஜோக்குகளில் பயன்படுத்தப்படும் பொம்மை வடிவங்கள் சீக்கிய மதத்தை பின்பற்றும் பஞ்சாபி மற்றும் அரியானா பகுதியில் வாழும் மக்களை குறிக்கிறது. இந்த வகையான ஜோக்குகள் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் பொம்மை ஓவியங்கள் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்துவது போல் அமைவதால், கடந்த 2015 ஆம் ஆண்டு சீக்கிய வழக்கறிஞர் ஹர்விந்தர் சவுத்ரி சர்தார்ஜி ஜோக்குகளை தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் பூஷன் ஆர் கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் ஹர்விந்தர் சவுத்ரி கூறியதாவது, இந்த வகையான ஜோக்குகளில் பயன்படுத்தப்படும் ஓவியங்கள் குறிப்பிட்ட சமூகத்தினரை அறிவற்றவர்கள் போல் சித்தரிக்கிறது. அவர்களது உடைகள், நாகரீகம் குறித்து கேலி, கிண்டல் செய்வது போல் உள்ளது. மேலும் இதுபோன்று பள்ளியில் சீக்கிய மாணவர் ஒருவர் அவரது உடை மற்றும் நாகரீகத்தால் கேலி, கிண்டல் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டது போன்றவற்றை சுட்டிக்காட்டினார். டிஜிட்டல் தலங்களிலும் இதுபோன்று சர்தார்ஜி ஜோக்குகள் மற்றும் சர்தார்ஜி மீம்கள் போன்றவை நகைச்சுவை தாண்டி பலரது மனதையும் புண்படுத்துகிறது.

இதனை தடை விதிக்க கோரி நீதிபதிகளுக்கு கோரிக்கை விடுத்தார். இந்த விளக்கத்தை கேட்ட நீதிபதிகள், சீக்கியர்கள் குறித்த இந்த வகையான நகைச்சுவைகள் நகைச்சுவையையும் தாண்டி குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்குவது, புண்படுத்துவது போல் உள்ளதால் இதுகுறித்து குறிப்பாக பள்ளிகளிலும், சமூகத்திலும் விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த வழக்கின் குறித்த முக்கிய விசாரணையை 8 வாரங்கள் கழித்து நடைபெறும் என தீர்ப்பளித்தனர்.