ராஜமவுலி டைரக்டில் கீரவாணி இசையில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்த படம் “ஆர்ஆர்ஆர்”. இந்த படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான ஆஸ்கர் விருதையும் வென்று பெருமை சேர்த்தது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிலும், அதற்கு முன் அமெரிக்காவில் நடந்த அப்படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு புரமோஷன் நிகழ்வுகளிலும் படத்தின் தயாரிப்பாளரான டிவிவி தனய்யா பங்கேற்கவில்லை.

ஆஸ்கர் விருத வென்ற பிறகு விருதுகளுக்காக செலவழித்தது குறித்த பேட்டி ஒன்றில் தான் எந்த ஒரு செலவையும் செய்யவில்லை, ராஜமவுலி எவ்வளவு செலவு செய்தார் என்பது தெரியாது என தயாரிப்பாளர் கூறியிருந்தார். இந்நிலையில் சென்ற வாரம் ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி, சந்திரபோஸ் போன்றோருக்கு தெலுங்கு திரையுலகத்தினர் பாராட்டு விழா நடத்தினர். அதில் தெலுங்கு சினிமாவின் பல சங்கங்களை சேர்ந்தவர்களும், தயாரிப்பாளர்கள் பலரும் பங்கேற்றனர்.

எனினும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் தயாரிப்பாளரான தனய்யா பங்கேற்வில்லை. அவர் பங்கேற்காதது பற்றி பல்வேறு தகவல்கள் உலா வருகிறது. அதாவது அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை எனவும் வேறு காரணங்களுக்காக பங்கேற்கவில்லை எனவும் சொல்கிறார்கள். மேலும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு அவர் பெயரளவில் தான் தயாரிப்பாளர் எனவும் சிலர் பேசிக்கொள்கிறார்கள். எனினும் இதுபற்றி தனய்யா எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.