அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வாரம் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கார் விருது கிடைத்தது. ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது ராஜமௌலியின் குடும்பத்தினர் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து தெலுங்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இப்போதுதான் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி, அவருடைய மனைவி, பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதாம். இதனால் இயக்குனர் ராஜமௌலி, நடிகர் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்கு 25,000 யுஎஸ் டாலர் கொடுத்து டிக்கெட் வாங்கினார்களாம். இது இந்திய மதிப்பில் ஒரு நபருக்கு 20 லட்சம் ரூபாய். மேலும் ஆஸ்கார் விருதில் கலந்து கொள்வதற்கு‌ ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு இலவச பாஸ் கிடைக்காததால் 1.14 கோடி ரூபாய் செலவு செய்து டிக்கெட் வாங்கி கலந்து கொண்டதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.