லடாக்கின் பாங்காங் ஏரிக்கு அருகே இமயமலை சிவப்பு நரி ஒன்று சாலையோரம் அச்சமின்றி உலா வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இது வனவிலங்குகளுக்கு விடப்பட்ட ஒரு ஆபத்தான எச்சரிக்கை என்று இந்திய வனப்பணி அதிகாரி பர்வீன் கஸ்வான் தெரிவித்துள்ளார். பொதுவாக மனிதர்களைக் கண்டால் ஒதுங்கிச் செல்லும் வனவிலங்குகள், இதுபோன்று வாகனங்களுக்கு அருகில் காத்திருப்பது யாரோ ஒரு பயணி அதற்கு உணவளித்திருப்பதையே காட்டுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vibhor Srivastava (@vibhor_srivastava)

இவ்வாறு வனவிலங்குகளுக்கு உணவளிப்பது அவற்றின் இயல்பான வேட்டையாடும் திறனை மழுங்கச் செய்து, உணவிற்காக மனிதர்களைச் சார்ந்து இருக்கும் நிலையை உருவாக்குகிறது. இதன் காரணமாக உணவைத் தேடி சாலைகளுக்கு வரும் விலங்குகள் அதிவேக வாகனங்களில் மோதி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுவதோடு, அவை குடியிருப்புகளுக்குள் நுழையும் சூழலும் உருவாகிறது.

சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதில் சிவப்பு நரிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன; குறிப்பாக இவை எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றன. மனிதர்கள் காட்டும் தவறான பரிதாபம் மற்றும் அன்பு, இந்த வனவிலங்குகளின் இயற்கையான வாழ்வாதாரத்தைப் பாதித்து ஒட்டுமொத்தச் சூழலியல் மாற்றத்திற்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் இத்தகைய செயல்களைத் தவிர்த்து வனவிலங்குகளின் இயல்புத் தன்மையைப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என்று வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அழகான காட்சியாகத் தெரிந்தாலும் அதற்குப் பின்னால் இருக்கும் இத்தகைய கசப்பான உண்மைகளை உணர்ந்து செயல்படுவதே உண்மையான வனப்பாதுகாப்பு என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.