ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் வட்டாரம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பயிற்சி ஒன்று நடைபெற்றது. இதன் தலைப்பு முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் ஆகும். இப்பயிற்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். தேர்போகி, வெள்ளரிஓடை, நொச்சியூரணி, கோரவள்ளி, தங்கச்சிமடம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மட்டும் இதில் பங்கேற்றனர்.

இந்த பயிற்சியில் ராமநாதபுரம் உயிர் உரங்கள் உற்பத்தி நிலையத்தின் வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியுள்ளதாவது, விவசாயிகள் மானாவாரி சாகுபடியில் நெற்பயிரை தொடர்ந்து பயறு வகைப்பயிர்கள் சாகுபடி செய்தல், எண்ணெய்வித்து பயிர்களான எள் சாகுபடி செய்தல், பயறு வகை சாகுபடியில் உயிர் உரங்களை பயன்படுத்தும் முறைகள் மற்றும் விதைநேர்த்தி, களை நிர்வாகம் குறித்து விளக்கமாக கூறினார்.

இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண் விற்பனைகுழு கண்காணிப்பாளர் சரவணக்குமார், உச்சிப்புளி வேளாண்மை அலுவலர் பாண்டியன் ஆகியோர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் பயன்கள் குறித்தும்,அரசு வழங்கும் மானிய பொருட்கள் மற்றும் திட்டங்கள் பற்றி கூறி, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.