மத்திய மந்திரி சபை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதில் இந்திய விமானப்படைகளுக்கு எச்டிடி- 40 ரகத்தை சேர்ந்த 70 அடிப்படை பயிற்சி விமானங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு விவகாரங்களுக்கான மந்திரி சபை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விமானங்கள் ரூ.6,828 கோடி செலவில் வாங்கப்படும்.  பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான், ஏரோநாட்டிக்ஸ் இந்த விமானங்களை உற்பத்தி செய்து வழங்குகிறது. சுமார் ஆறு ஆண்டுகளில் இந்த விமானங்கள் விநியோகிக்கப்படுகிறது. குறைந்த வேகத்திலும், பயிற்சிக்கு தகுந்த விதமாகவும் இந்த விமானங்கள் செயல்படக்கூடியவை. மேலும் 56% உதிரி பாகங்கள் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்.

விமானங்கள் உற்பத்திக்காக சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பயன்படுத்தும். அதனால் இந்த உற்பத்தியில் சராசரியாக 1500 ஊழியர்களுக்கு நேரடியாகவும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்த மூவாயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இது குறித்து ராணுவ மந்திரி ராஜநாத் சிங் கூறியதாவது,  பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தற்சார்பு நிலையை அடைவதை வலுப்படுத்துவதில் இந்த முடிவு முக்கியமானது என தெரிவித்துள்ளார். ரூ.318 கோடி செலவில் 3 பயிற்சி கப்பல்கள் கொள்முதலுக்கு எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் இந்த கப்பல்கள் வடிவமைத்து கட்டப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு இந்த கப்பல்களை ஒப்படைக்கும் பணி தொடங்கும். மேலும் கப்பற்படைக்கு தேர்ந்தெடு கடற்படைக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆண், பெண்களுக்கு அடிப்படை பயிற்சிக்கு பின் பயிற்சி அளிக்க இந்த கப்பல்கள் பயன்படுத்தப்படுகிறது. அதே போல் பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் மனிதாபிமான உதவி அளிக்க உதவும். கப்பல் கட்டும் பணியில் சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் உதவும் என ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.