பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. இதனால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை சமாளிப்பதற்கு அந்நாட்டு மக்கள் அல்லாடி வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக அந்நாடு சர்வதேச நிதியத்திடம் இருந்து கடன் பெற முயற்சித்து வருகின்றது. ஆனால் கடனை வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் பல்வேறு நிபந்தனங்களை பாகிஸ்தானுக்கு விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளை எட்டுவதற்கு ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் முதல் பகுதியாக அந்நாட்டின் மந்திரிகள் அரசு அலுவலகம் ரீதியாக பயணம் மேற்கொள்ளும் போது விமானங்களில் பிசினஸ் வகுப்புகளில் பயணம் செய்வதற்கும், 5 நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மந்திரி சபை உறுப்பினர்களின் சம்பளம் குறைப்பு, பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் சலுகைகளை திரும்பி பெறுதல், ஆடம்பர பொருட்கள் மற்றும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை, ஒரு அரசு ஊழியருக்கு ஒரே ஒரு வீடு மனை, ஆகிய சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் கூறியுள்ளார். இந்த சிக்கன நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் புதிய நிதியாண்டிற்கான பட்ஜெட்டின் போது கூடுதலாக சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.