சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை பகுதி உள்ளது. அப்பகுதியில் ஒரு கும்பல்  குழந்தை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி செவ்வாய் பேட்டை பகுதியில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ஈரோடு பகுதியில் வசித்து வரும் பெண்ணின் பச்சிளம் குழந்தையை மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி நாகசுதா ஆகியோர் எடப்பாடி பகுதியில் வசித்து வரும் தம்பதியருக்கு 7 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து மோகன்ராஜ் மற்றும் நாகசுதா ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவரது செல்போனில் பச்சிளம் குழந்தைகளின் புகைப்படங்களும், குழந்தை விற்பனைக்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த நபர்களுடன் தொடர்பு இருந்ததும் தெரிய வந்தது. அதன்படி மேலும் 4 பேரை கைது செய்து காவல் துறையினர் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த கும்பல் குழந்தையில்லாத தம்பதிகளிடம் தொடர்பு கொண்டு ஏழ்மையில் இருக்கும் குடும்பத்தினரை குறி வைத்து அவர்களிடம் பண ஆசையை காட்டி குழந்தை விற்பனைக்கு தூண்டி விடுகின்றனர். அந்த வகையில் வரும் பணத்தின் ஒரு பங்கை குழந்தையை பெற்றெடுத்த பெற்றோருக்கு வழங்குகின்றனர் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் 2 பேரை காவல்துறையினர் தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது