இந்தியாவில் வரும் 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், டெல்லியில் காவல்துறையின் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதோடு ராணுவ வீரர்களின் பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய ரெய்டில் ஜெகஜீத் சிங் என்ற ஜக்கா மற்றும் நவுசத் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். பல்ஸ்வா பால் பண்ணை பகுதியருகே பதுங்கியிருந்த அவர்களை கடந்த வாரம் பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகள் உடன் உள்ள தொடர்பும், பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் கொடுத்த தகவலின்படி டெல்லியின் வடக்கு பகுதியான பல்ஸ்வா பகுதியில் காலி மனையில் சோதனையிட்டதில் உடல் ஒன்றை கைப்பற்றினர். அந்த உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் இரண்டு பேரும் தங்கியுள்ள வாடகை கட்டிடத்திலிருந்து 2 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டது. மேலும் 3 கைத் துப்பாக்கிகள், 22 வெடிக்க தயாரான நிலையிலுள்ள தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜக்காவுக்கு கனடாவை சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. ஹர்கத்-உல்-அன்சார் என்ற பயங்கரவாத அமைப்புடன் நவுசத்துக்கு தொடர்புள்ளது என காவல்துறையினர் கூறியுள்ளனர். இவர்கள் பல மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த பயங்கரவாதிகள் உடன் தொடர்புடைய வேறு 4 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இவர்களுக்கு பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு செல்லும் ஆளில்லா விமானம் வழியே ஆயுத சப்ளை நடந்துள்ளது. அதன்பின் அந்நாட்டு பயங்கரவாதிகளுடன் இவர்கள் தொடர்பில் இருந்து இருக்கின்றனர். இதற்காக சமூகஊடகம் வழியே சிக்னல் எனும் செயலியை பயன்படுத்தி வந்து உள்ளனர். உத்தரகாண்டின் அடையாளம் கண்டறியப்படாத இடத்திலிருந்து ஆயுதங்களை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல்துறையின் சிறப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.