கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.பவழங்குடி கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது வெங்கட்ராமன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மாமனார் கோவிந்தாசாமி சீதாலட்சுமி உடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி கோவிந்தசாமி சீதாலட்சுமியின் வீட்டிற்கு சென்று குடிநீர் மற்றும் மின்சார இணைப்பை துண்டித்தார்.

இதனால் சீதாலட்சுமி தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. இதுபற்றி அறிந்த சீதாலட்சுமியின் தந்தை ராமதாஸ் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தைகளுடன் மாயமான சீதாலட்சுமியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.