புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் டிரைவரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிவேதா(25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். தற்போது கணவன், மனைவி இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபாளையம் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிவேதாவுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த கணேசன் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இதனையடுத்து கணேசன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நான் அந்தமான் நிக்கோபார் தீவில் பிறந்தேன். பெற்றோரை இழந்த என்னை வெள்ளைச்சாமி என்பவர் தத்தெடுத்து வளர்த்தார். கடந்து 8 ஆண்டுகளுக்கு முன்பு நிவேதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நிவேதா மில் வேலைக்கு சென்ற போது அங்கு வேலை பார்க்கும் மற்றொருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்து நிவேதாவை கண்டித்த போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் எனது மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறினேன். அதன் பிறகும் நிவேதா செல்போன் மூலம் அவருடன் பேசி வந்தார். நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து எனது மாமியாரிடம் குழந்தைகளுக்கு பழச்சாறு வாங்கி கொடுக்குமாறு கூறி வெளியே அனுப்பி விட்டு எனது மனைவியிடம் கள்ளக்காதல் விவகாரம் குறித்து பேசினேன். அப்போது ஏற்பட்ட தகராறில் கோபத்தில் கத்தியால் நிவேதாவின் வயிறு, கழுத்து உள்ளிட்ட 27 இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்தேன் என கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.