கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சொலவம்பாளையம் பாலாஜி அவென்யூ பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தில் இருக்கும் கிணற்றை தூர்வாரும் பணியில் தர்மபுரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று மதியம் வேலை பார்த்து கொண்டிருந்தபோது கார்த்தி(19) என்பவர் கிணற்று சுற்றுசுவரில் இருக்கும் செடிகளை அகற்றுவதற்காக இரும்பு பக்கெட்டில் அமர்ந்து ரோப் மூலம் உள்ளே இறங்கியுள்ளார்.

அப்போது பக்கெட்டின் கொக்கி உடைந்து கார்த்தி கிணற்றுக்குள் விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், தந்தை இறந்து விட்டதால் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கார்த்தி வேலைக்கு வந்துள்ளார். வேலைக்கு வந்த 2-வது நாளில் கார்த்தி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.