தமிழகத்தில் இன்று முதல் 18ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு வரும் 14, 15ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா பகுதியில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோன்று தென்னிந்திய பகுதிகளில் மேலொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் தமிழகத்தில் இன்று கோவை போன்ற மலைப்பகுதிகள் நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிக கனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி போன்ற மலைப்பகுதிகள் தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வரும் 15ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிக கனமழையும் கோவை, திருநெல்வேலி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.