இந்தியாவின் குர்ரீத் ஜீதேஷ் (Gureet Jeetesh) என்ற வாலிபர், சுமார் 3 மாதங்களுக்கு முன்புதான் மாணவர் விசாவில் பிரிட்டன் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு மாணவர் தங்கும் விடுதியில் தங்கியிருந்த அவர், சமூக வலைதளங்கள் வாயிலாகப் பல சிறுமிகளிடம் தவறான நோக்கத்தில் பழகியதாகக் கூறப்படுகிறது. இதில் உச்சகட்டமாக, 14 வயதுச் சிறுமி வேடத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரியிடமே ஜீதேஷ் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார்.

சிறுமி என நினைத்து அந்த அதிகாரியை நேரில் சந்திக்க அவர் திட்டமிட்டபோது, கையும் களவுமாகப் பிடிபட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், “என்னை மன்னித்துவிடுங்கள், ஒருமுறை எச்சரித்து விட்டுவிடுங்கள்” என ஜீதேஷ் கதறுவதும், அதற்கு அங்கிருந்தவர்கள் “எச்சரிக்கையா? ஜன்னலுக்கு வெளியே பார், போலீஸ் நிற்கிறது” எனத் திட்டிக் கண்டிப்பதும் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் அவரது விசா ரத்து செய்யப்பட்டு, அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய மாணவர் ஒருவர் வெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான செயலில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.