
சமீபத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி லாரி டிரைவர், செருப்பு தைக்கும் தொழிலாளி, ரயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து வருகிறார். அவர்களுடன் கலைந்து கலந்துரையாடி வீடியோவை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 15 ஆம் தேதி சென்ற ராகுல் காந்தி அந்த மருத்துவமனையை சுற்றியுள்ள சாலைகள் நடைபாதைகள் மற்றும் சுரங்க பாதைகளில் நோயாளிகள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து அவர்களது பிரச்சனைகளை மற்றும் குறைகளை கேட்டு அறிந்தார்.
இது குறித்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, கடந்த 15 ஆம் தேதி நான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு வெளியே சிகிச்சைக்காக வந்த நோயாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன். அவர்கள் சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குளிர்ந்த நிலம், பசி மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் நம்பிக்கையின் சுடரை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். மத்திய அரசும், டெல்லி அரசும் பொது மக்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது என்று அவர் கூறினார்.