மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் உத்கர்ஷ் ஷிங்னே (19) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சியான நிலையில் மருத்துவ படிப்பிற்காக போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து படித்து வந்தார். இவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஷிங்னேவின் வீடு நேற்று காலை திறக்கப்படாமல் இருந்துள்ளது. நீண்ட நேரமாக அவரது வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டினர்.

ஆனால் எந்தவித பதிலும் கிடைக்காததால் அவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மாணவர் ஷிங்னே கழுத்தில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். உடனடியாக இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு வீட்டினை ஆய்வு செய்த போது மாணவனின் செல்போனை கைப்பற்றியதில் வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்டிருந்த ஒரு குறுஞ்செய்தியில் கல்லூரி பாடத்திட்டத்தில் மாற்றம் மற்றும் குறைவான வருகை பதிவேடு காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் இருந்தது.

பின்னர் இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மாணவர் சில நாட்களுக்கு முன் ஆன்லைன் மூலம் புதிய கத்தியை ஆர்டர் செய்துள்ளார். அந்த கத்தியை வைத்து தான் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.