ரந்தம்போர் தேசிய பூங்காவின் மண்டலம்-3 பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகள் முன் நடந்த அதிர்ச்சி தரும் காட்சியே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகழ்பெற்ற பெண் புலி ரித்தி(7) மற்றும் அவரது முதிய மகளான மீரா இடையே, நடந்த வெறித்தனமான மோதல், காட்டுயிர் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இந்த நிகழ்வை ஜங்கிள் சபாரியில் வந்த பயணிகள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பார்வையாளர்களின் கூற்றுப்படி, மீரா தாயான ரித்தியின் ஆட்சி பகுதியை கைப்பற்ற முயற்சித்ததால் இருவருக்குமான பதற்றம் உச்சத்தைத் தொட்டு மோதலாக வெடித்தது.

சுமார் 2 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலின் போது, காட்டில் இருவரின் கர்ஜனைகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. தனது அனுபவத்தால் சுழன்ற ரித்தி, இறுதியில் மகளை தோற்கடித்த நிலையில், மீரா வனப்பகுதிக்குள் ஆழமாக ஓடி ஒளிந்ததாக கூறப்படுகிறது.

ரித்திக்கு ஒரு தனி மரியாதை உண்டு. ரந்தம்போர் பூங்காவின் மற்றொரு பிரபல புலியான T-84 அரோஹெடின் மகளாக இருந்த ரித்தி, கடந்த 2023-ஆம் ஆண்டு மூன்று குட்டிகள் பெற்றிருந்தார், இதில் மீரா மூத்தவராக இருக்கிறார்.

வனவிலங்கு நிபுணர்கள் கூறுகையில், இளம் பெண் புலிகள் வளர்ந்ததும் தங்களுக்கென தனி ஆட்சி பகுதிகளை அமைக்க முயற்சிப்பது இயற்கையான ஒன்றாகும். ஆனால், தாயும் மகளும் மோதும் இந்த நிகழ்வு காட்டுயிர் உலகின் கடுமையான ஒரு பக்கம் என்பதை நினைவுபடுத்துகிறது.