நான் அரசியல்வாதி அல்ல. அனைவருக்கும் பொதுவானவன் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைப்படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்கும் முழு உரிமை என்னிடம் இருக்கிறது. ஆகவே யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டுமோ, அங்கு அவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்படும் என்று கூறினார்.

முன்னதாக அ.தி.மு.க விவகாரத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இப்போது முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என சபாநாயகர் அப்பாவு கூறினார். மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டப்பேரவைக்கு தனித்துவமான அதிகாரம் இருக்கிறது.

சட்டப்பேரவையை நடத்துவது பேரவை தலைவரின் முழு பொறுப்பு. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கும் சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் தொடர்பில்லை என்று அப்பாவு தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.