முருகன் பக்தர்கள் மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணாவை குறித்து விமர்சித்து வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர் கூறியதாவது முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். அறிஞர் அண்ணாவின் மாற்றான் தோட்ட மல்லிகைக்கும் மனம் உண்டு எனும் கூற்றின் அடிப்படையிலும் முருக பக்தர்கள் என்ற அடிப்படையில் தான் மாநாட்டில் பங்கேற்றோம்.

அதில் அரசியல் இருக்காது என்று நம்பினோம். மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் பெரியார் மற்றும் அண்ணாவை குறித்து அவதூறு செய்ததாக தகவல் வந்தது. அதிமுக ஒருநாளும் கொள்கையை, கோட்பாட்டை, லட்சியத்தை விட்டுக் கொடுக்காது. அண்ணாவை, ஜெயலலிதாவை அவதூறாக பேசியதற்காக கடந்த காலத்தில் என்ன முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

திமுக போல் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை எடப்பாடி பழனிச்சாமி தக்க வைத்துக்கொள்ள மாட்டார். பாஜக உடன் கூட்டணியில் இருந்த போதும் மக்களுக்கு தேவையான திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக் கொடுத்தார். தற்போது மக்கள் நலனுக்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் கிடையாது.

நாங்கள் அந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டதை பார்க்கவில்லை. திரைக்கு பின்புறமா அமர்ந்து இருந்ததால் பார்க்க முடியவில்லை. பெரியார், அண்ணா குறித்த அவதூறு கருத்து கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மாநாட்டின் தீர்மானம் உறுதி மொழியை அதிமுக ஒரு போதும் ஏற்காது என்று தெரிவித்தார்.