
திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கணவரை இழந்த சுபலட்சுமி என்பவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இதய நோய் பாதிப்பால் போராடி வந்துள்ளார். இவருடைய மகன் சுனில் குமார் அருகிலுள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொது தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று முன்தினம் சுனில் குமார் தேர்வெழுத சென்ற போது சுபலட்சுமி உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார்.
தனது தாய் இறந்த சோகத்தை மனதில் வைத்துக் கொண்டு அந்த மாணவன் பொது தேர்வை எழுதினான்.அதன் பின் வீட்டிற்கு வந்து தனது தாயின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு காலில் விழுந்து வணங்கிய அவன் கண்ணீர் விட்டு கதறினான். இந்த காட்சி அங்குள்ள அனைவரது மனதையும் உலுக்கியது. இதைத் தொடர்ந்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சுனில் குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
அதோடு அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் “மாணவரின் சகோதரராக துன்பத்தை பகிர்ந்து கொண்டு தைரியமுடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள் எப்போதும் துணை நிற்போம்” என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்தியையும் தெரிவித்தோம் மற்றும் சுனில் குமார் கல்வியின் மூலம் வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் அம்மாவின் பெரு விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும்” என்று கூறியிருந்தார். தனது தாய் இறந்த சோகத்தில் மாணவன் பொதுத் தேர்வை எழுதிய இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.