
ராஜஸ்தான் மாநிலத்தின் பரன் மாவட்டத்தில் உள்ள ஜெய்த்புரா கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெய்ப்பூரில் வசித்து வந்த ரோஷன் பா என்ற பெண், தனது காதலன் மகாவீரருடன் இணைந்து தனது நான்கு வயது மகள் இஷிகாவை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.
இந்த கொலை சம்பவம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. பின்னர், சடலத்தை சாக்குப் பையில் வைத்து பரன் மாவட்டம் ஜெய்த்புரா கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் உள்ள இரும்பு அலமாரிக்குள் பதுக்கி வைத்துவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை அம்பலமானது. ஜெய்த்புரா கிராமத்தில் வசிக்கும் ஜெய்ராம் பைர்வா என்ற நபர், தனது வீட்டு அறையில் உள்ள அலமாரியிலிருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தார். அலமாரியைத் திறந்தபோது, வெள்ளை பிளாஸ்டிக் பையில் இருந்து இரத்தம் வடிந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
போலீசார் அந்த பையைத் திறந்தபோது, அதில் குழந்தையின் சடலம் இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், அந்த சிறுமி இஷிகா என அடையாளம் காணப்பட்டார். விசாரணையில், இஷிகா ரோஷன் பா மற்றும் அவரது முன்னாள் கணவர் ரவீந்தர் பைர்வாவின் மகளாக இருப்பது தெரியவந்தது. ரோஷன் பா கடந்த ஏழு மாதங்களாக மகாவீரருடன் ஜெய்ப்பூரில் லிவ்-இன் உறவில் வசித்து வந்துள்ளார்.
இந்தக் காதல் ஜோடி, ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் ரயில்வே நிலையம் அருகே இஷிகாவை கொலை செய்து, சம்பவம் நடந்த இடத்தில் எந்த சாட்சியங்களும் இல்லை என்பதை உறுதி செய்து, உடலை பரனில் உள்ள கிராமத்திற்கு கொண்டு வந்து பதுக்கி வைத்துள்ளனர். தப்பிச் சென்ற இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பன்வர்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் அவரது தாத்தா ஜெய்ராம் பைர்வாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொடூரக் கொலை சம்பவம், மக்கள் மனங்களில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தாயின் கையால் குழந்தை கொல்லப்படுவது போன்ற கொடூரங்கள் மனிதநேயத்தையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருக்கிறது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.