சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்.சி நகரில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் சேதுராமன் என்பவர் உதவி பொது மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நங்கநல்லூர் டெலிகிராப் காலனியில் வசிக்கும் ராஜேஸ்வரி(49), மேடவாக்கம் பாபு நகரை சேர்ந்த ஜெகநாதன்(51), அவரது மனைவி முத்துலட்சுமி(46) ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினர்.

அவர்கள் 1 கோடி ரூபாய்க்கும் மேல் ஏமாற்றி விட்டதால் சட்டரீதியான நடவடிக்கை எடுத்து கடன் பணத்தை மீட்டு தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் வீட்டு கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதனால் ஜெகநாதன், முத்துலட்சுமி, ராஜேஸ்வரி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.