
கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்ட கொத்தமங்கலம் பகுதியில் வசித்து வரும் பெண்கள் பாரு குட்டி, மாயா, டார்லி ஸ்டீபன். இவர்கள் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் காடுகளை ஒட்டிய பகுதிகளில் மாடுகளை மேய கூட்டி சென்றிருந்தனர். அவர்கள் கவனிக்காத நேரத்தில் மாடுகள் காட்டுக்குள் சென்று விட்டது. இதனால் மாடுகளை தேடி மூன்று பெண்களும் காட்டுக்குள் சென்றுள்ளனர். காட்டுக்குள் சென்ற பெண்கள் மாலை நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் குடும்பத்தார்கள் வன அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தனர்.
உடனே காவல்துறையினர் காட்டுக்குள் சென்ற மூன்று பெண்களையும் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர் இவர்களுடன் தீயணைப்பு வீரர்களும் சென்றிருந்தனர். மாலை நேரத்தில் தேடுதல் பணி ஆரம்பித்து இரவு ஆகியும் மூன்று பெண்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தும் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரரின் தீவிர தேடுதலில் மூன்று பெண்களும் கண்டறியப்பட்டனர். காட்டுப்பகுதிக்குள் சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரம் வரை சென்றதால் திரும்பி வர வழி தெரியாமல் மூன்று பெண்களும் ஒரே இடத்தில் இருந்துள்ளனர்.
இன்று காலை வனத்துறையினரால் மூன்று பெண்களும் காட்டிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டனர். வனத்துறையினரின் இந்த செயலை பாராட்டி கிராமத்தில் உள்ள மக்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இரவு முழுவதும் துரிதமாக செயல்பட்டு பெண்களை மீட்ட வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.