திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டவலம் பூரிகாரன் தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் பானிபூரி கடை வைத்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என செந்தில் குமார் சிறுமியை மிரட்டியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அப்போது சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தங்களது மகளிடம் விசாரித்த போது அவர் நடந்தவற்றை கூறியுள்ளார். இது தொடர்பாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர்.