திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பைபாஸ் பகுதியில் ராமாயன்பட்டி அருகே உள்ள தரைப்பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய அட்டைப்பெட்டி ஒன்று கயிற்றால் கட்டப்பட்டு கிடந்தது. அந்த அட்டைப்பெட்டியில் கை, கால்களை கட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் டிஎஸ்பி சிபி சாய் சௌந்தர்யன் தலைமையில் தனிப்படை அமைத்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சடலம் கிடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர்.

அதில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் ஆர்த்தி தியேட்டர் ரோடு வஉசி நகரைச் சேர்ந்த குபேந்திரன் (58) என்பது தெரிய வந்தது. அவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். நிலையில் என்.எஸ் நகர் முனியப்பன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கண்ணன் (54), கோபால்பட்டி V  குரும்பப்பட்டியை சேர்ந்த சாந்தி (59) மற்றும் திருப்பூர் அவிநாசி மடத்து பாளையம் பகுதியை சேர்ந்த பிரியா (26) ஆகிய மூவரும் சேர்ந்து நிதி நிறுவனத்தில் ஏற்பட்ட கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் குபேந்திரனை தள்ளிவிட்டுள்ளனர்.

அதில் குபேந்திரன் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனால் அவரது உடலை கட்டி அட்டைப்பெட்டியில் வைத்து தரைப்பலாம் அருகே வீசி சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து அச்சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட தொட்டி ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர் பின்பு மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.