தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். இயக்குனர் லோகேஷ் தற்போது விஜயுடன் சேர்ந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் ஒரு மாத காலமாக நடந்து முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இறுதி படப்பிடிப்பு ஐதராபாத்திலும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னால் தயாரிப்பாளருக்கு எந்தவித நஷ்டமும் வந்து விடக்கூடாது என்பதற்காக எந்தவித சலிப்பும் இல்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம்.

தன்னுடைய கடமையையும் வேலையையும் சரிவர செய்தாலே அது தனக்கான முதல் வெற்றி என்பது லோகேஷின் கொள்கை என கூறப்படுகிறது. லியோ படப்பிடிப்பை மே மாதத்திற்குள் முடித்து அக்டோபர் 19-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் லோகேஷ் கனகராஜ் தீவிரம் காட்டி வருகிறார். லோகேஷின் இந்த வேகத்தையும் அசுர வேக வளர்ச்சியையும் பார்த்து கோலிவுட் வட்டாரம் ஆச்சரியத்தில் இருக்கிறது. மேலும் விஜயின் லியோ படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பிரியா ஆனந்த், ஜனனி, மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், சஞ்சய் தத் மற்றும் கௌதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.