லோகேஷ் கனகராஜ் இயக்கி அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வரக்கூடிய லியோ திரைப்படத்தின் வெற்றி விழா  நேற்று மாலை பெரிய மேடுவில் இருக்கக்கூடிய நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த வெற்றி விழாவை நேரில் பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள் மதியம் 1 மணி முதலே நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு முன்பு குவியத் தொடங்கினர்.

பொதுவாக நடிகர் விஜய் நடித்த திரைப்படம் வெளியாகும் போது ஆடியோ லாஞ்ச் விழாவில் விஜய் சொல்லக்கூடிய குட்டி ஸ்டோரி திரைப்படத்துறையிலும்,  அரசியல் ரீதியாகவும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும். ஆனால் லியோ படத்திற்கு ஆடியோ லாஞ்ச் இல்லாமல் வெற்றி விழா நடைபெறும் நிலையில் இதற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது. இந்த வெற்றி விழாவிலும் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கும் என்று ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது.

எனவே இந்த வெற்றி விழாவை பார்ப்பதற்காக ரசிகர்களும், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளும் மிகவும் ஆர்வத்தோடுகாத்திருக்கிறார்கள். நேரு உள்விளையாட்டு அரங்கம் முன்பு காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  சட்ட ஒழுங்குப் பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக  நேரு உள்விளையாட்டு அரங்கை சுற்றி சுமார் 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ரசிகர்கள் அனுமதியை பொருத்தவரை 5 கேட் வழியாக அனுமதிக்கப்படுகிறார்கள். விஐபி உள்ளே செல்வதற்கு ஒரு வழி, அதேபோல ரசிகர்கள், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் செல்வதற்கு வழி என தனித்தனியாக ஏற்பாடு என்பது செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 5000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஏற்பாடு என்பது செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி பார்க்க வரும் கோல்ட், சில்வர், பிளாட்டினம் என பாஸ் கொடுக்கப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சி பார்க்க வருபவர்கள் கண்டிப்பாக பாஸ் எடுத்துட்டு வர வேண்டும் என்று முன்னதாகவே அறிவுறுத்தலானது கொடுக்கப்பட்டு இருந்தது. அதே போல ரசிகர்கள், விஜய் மக்கள் மன்ற அடையாள அட்டை,  ஆதார் அட்டை, இதோடு நிகழ்ச்சிக்கான பாஸ் என மூன்றையும் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டடு தான் நிகழ்ச்சி நடந்தது.

அதில் பேசிய நடிகர் விஜய், ஒரு குட்டி பையன் ஆசையா அவங்க அப்பா சட்டையை எடுத்து போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச் எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ல ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த சட்ட அவனுக்கு செட்டே ஆகாது. தொளதொளன்னு இருக்கும். வாட்ச் கையில் நிற்காது. அந்த சேர்ல உட்காரலாமா  வேணாமா ? தகுதி இருக்கா ? இல்லையா ?  அதெல்லாம் அவனக்கு தெரியாது. அப்பா சட்டை, அப்பா மாதிரி ஆகணும் கனவு. அதில் என்ன தவறு ? அதனால பெருசா கனவு காணலாம். ஒருத்தனும் ஒன்னும் பண்ண முடியாது என பேசினார்.